Wednesday, June 29, 2016

மாமல்லையின் உன்னத படைப்பு பூனையின் தவம்

பூனையின் பொய்த் தவம், மாமல்லபுரம்


ஒரு காலத்தில், ஒரு பொல்லாத பூனை, தன் வேலைகளை அனைத்தையும் கைவிட்டு, (பக்தன் ஒருவனின் முறைமையின்படி), தனது கரங்களை உயர்த்திக் கொண்டு, கங்கைக்கரையில் தனது வசிப்பிடத்தை அமைத்துக் கொண்டது. தன் இதயத்தைத் தூய்மைப்படுத்திக் கொண்டதைப் போல நடித்து, அனைத்து உயிரினங்களின் நம்பிக்கையையும் பெறும்படி அவற்றிடம் "நான் இப்போது அறம் பயில்கிறேன்" என்று சொன்னது அந்தப் பூனை. நீண்ட காலத்திற்குப் பிறகு, பறவைகள் அனைத்தும் பூனையிடம் நம்பிக்கை வைத்தன. ஒன்றாகச் சென்ற அவை, அந்தப் பூனையைப் பாராட்டின. பறவைகளை உண்ணும் அந்தப் பூனை பறவைகள அனைத்தாலும் வழிபடப்பட்டு, தன் காரியம் நிறைவாகியதாகவும், தனது தவத்தின் பயன் தனக்குக் கிடைத்துவிட்டதாகவும் கருதியது. மேலும் சில காலத்திற்குப் பிறகு, எலிகள் அந்த இடத்திற்குச் சென்றன. பெருஞ்செயலில் பெருமையுடன் உழைத்து, நோன்புகள் நோற்பதில் ஈடுபடும் ஓர் அறம் சார்ந்த உயிரினமாகவே அவை அனைத்தும் எலிகளனைத்தும் பூனையைக் கண்டன. அந்தத் தீர்மானமான நம்பிக்கை அடைந்த எலிகள்,"நமக்கு நிறைய எதிரிகள் இருக்கின்றனர். எனவே, இந்தப் பூனை நமது தாய்மாமனாகட்டும். மேலும் இவர் நமது குலத்தின் முதியவர்களையும் சிறுவர்களையும் எப்போதும் பாதுகாக்கட்டும்" என்று விரும்பின. இறுதியாக அந்தப் பூனையிடம் சென்ற எலிகள்அனைத்தும், "உமது அருளால், நாங்கள் இன்பமாகத் திரிய விரும்புகிறோம். எங்களது அருள்நிறைந்த புகலிடம் நீரே, எங்களது பெரும் நண்பர் நீரே. இதன் காரணமாக, நாங்கள் எங்கள் அனைவரையும் உமது பாதுகாப்பின் கீழ் வைக்கிறோம். அறத்திற்கு எப்போதும் அர்ப்பணிப்புடன் இருப்பவர் நீர், அறத்தை ஈட்டுவதிலேயே எப்போதும் ஈடுபடுபவர் நீர். எனவே, ஓ! பெரும் அறிவாளியே {பூனையாரே}, தேவர்களைக் காக்கும் இடிதாங்கியைப் போல எங்களைப் பாதுகாப்பீராக" என்றன எலிகள். அதன் பின் என்ன நடந்திருக்கும் என்று யாவரும் அறிவோம். இக்காட்சியை மெய்யான வடிவில் மாமல்லபுரத்தின் அர்ச்சுனன் தபசு என்னும் சிற்பத் தொகுதியில் சிற்ப வடிவாக்கப்பட்டுள்ளது. இச்சிற்பத்தை உற்று நோக்குங்கள். கதையின் தன்மையை யதார்த்தத்தை பல்லவ சிற்பி தன் கைவண்ணத்தில் உயிரோட்டமாக்கியுள்ளான் என்பது விளங்கும். பூனை கையை உயர்த்தி தவம் செய்கிறது. தவத்தினால் அதன் உடல் சற்று மெலிந்து காணப்படுகிறது. ஆனால் அத்தவம் பொய் தவம் என்று உணராத எலிகள், அப்பூனையினை சூழ்ந்து நின்று, கைகளைக் கூப்பியவாறு தங்களைக் காக்க வேண்டுகின்றன. மேலும் அதன் துறவறத்தை வியந்து போற்றுகின்றன. 

3 comments:

  1. மானிடர் உள்ள மட்டும்
    பூனையார் தவமும் உண்டு
    பக்தர்களும் உண்டு
    பரவசமும் உண்டு
    எந்தெந்த வகையில் என்பதில் வேறுபாடும் உண்டு
    நகையா உவகையா
    நளினமா கதையா
    எதில் சிறப்பு இச்சிற்பம்
    கண்களிலும் கருத்திலும் பதில் உண்டு

    ReplyDelete
  2. கவிதை...கவிதை...

    ReplyDelete